வயல் வெளி நம் தேசத்தின் வாழ்க்கை ஒளி


வயல் வெளி

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்”

-ஒளவையார்

முகவுரை:

வயலைப் பகுதி பகுதியாகப் பிரிக்கும் சிறு கரையை (வரப்பு) உயர்த்தி நீர் நிலையாக வயலில் நிரம்பச் செய்தால், நெல் விளைச்சலானது சிறிது சிறிதாக வளர்ச்சி பெரும். நெல் விளைச்சல் வலிமையாக இருந்தால்  மக்களின் இல்வாழ்க்கை பேரின்பமாக அமையும். மக்கள் பசிப்பிணியின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த இராச்சியம் சிறப்பானதாகவும் தேசத்திற்கு வழிகாட்டியாகவும் அமையும்.

நெல்:

உயிரினங்கள் வாழும் ஆதிகாலம் முதல் நெல் இனத்தை ஆசிய, ஆப்பிரிக்க நெல் என்றும் இருபிரிவாக இருந்தது. ஆசியாவில் நன்செய் நிலத்தில் புன்செய்ப் பயிர் கி.மு 4000 ஆண்டிற்கு முன்பாகவே பல பிரதேசத்தில் துவங்கியதாகக் கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். இன்றைய விரிவான விவசாய வளர்ச்சிக்கு அன்று அடிப்படையாக இருந்த, மரங்களும் செடிகளும் அடர்ந்து பகுதியில் வளர்ந்த முதல் வழிகாட்டியாக திகழும் “காட்டு நெல்” இனமே  ஆகும்.

தென்கிழக்காசியாவில் உயிர்த்தோற்றமான இந்த வகை நெல் “புல்”வகையை சேர்ந்த தாவரமாகயிருந்தாலும், வயல் வெளி நம் தேசத்தின் வாழ்க்கை ஒளியாக உலகமெங்கும் படைசாற்றுகிறது. 

விரிவுரை:


"நெல்" ஆதிகாலத்தில் பல வகைகள் புழக்கதில் இருந்து வந்தது. இருப்பினும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழம்பெருமை வாய்ந்த சில  நெல்மணியின்  வகைகள்:

புழுதிச்சம்பா, துளசிவாசசீரகச்சம்பா, கைவிரச்சம்பா, செம்பிளிச்சம்பா, காட்டுச்சம்பா, நீலஞ்சம்பா, கண்டவாரிச்சம்பா, வெள்ளைக்கார், அன்னமழகி, குள்ளங்கார், வரப்புக்குடைஞ்சான், திருப்பதிசாரம், மொழிக்கருப்புச்சம்பா, சேலம்சம்பா, கொசுவக்குத்தாளை, சிகப்புக்கவுனி, பனங்காட்டுக்குடவாழை, கருத்தக்கார், வாழைப்பூச்சம்பா, மஞ்சள்பொன்னி, அறுபதாங்குறுவை, மைசூர்மல்லி, குறுவைக்களஞ்சியம், விஷ்ணுபோகம், காட்டுக்குத்தாளம், வாசனைசீரகச்சம்பா, வெள்ளைப்பொன்னி, கந்தசாலா, தூயமல்லி, கருடன்சம்பா, கூம்பாளை, சண்டிக்கார், கொள்ளிக்கார், அம்யோமோகர், கொச்சின்சம்பா, அறுபதாம்சம்பா, வசரமுண்டான், டெல்லிபோகலு, கண்டசாலி மதிமுனி, கல்லுருண்டையான், வாலான் போன்றவை 

மேலும் புழுதிக்கார், மரநெல், காட்டுவாணிபம், கார்நெல், சொர்ணமசூரி, கருப்புப்பாசுமதி, கல்லுண்டை, ஜீரா, சுடர்ஹால், வெளியான், சூலக்குணுவை, கொத்தமல்லிச்சம்பா, மல்காமோடு, பதரியா, வரேடப்பனசேன், வால்சிவப்பு, திமாரிகமோடு, கரிகஜவலி, ட்டிகாநெல், சிங்கினிகார், செம்பாளை, ராஜமுடி, சடைக்கார், காஷ்மீர்டால், சம்யா, செம்பினிப்பிரியன, ராமகல்லி, மொட்டக்கூர், ஜல்ஜிரா, ரட்னசுடி, சுதர், கரிஜாடி, ஹாலுஉப்பலு, சன்னக்கிநெல், செம்பாலை, மிளகி, குருவிக்கார், கேரளாரகம், கருப்புச்சீரகச்சம்பா, பூங்கார், காட்டுயானம், குடவாழை, கம்பஞ்சம்பா, வெள்ளைக்குருவிக்கார், தேங்காய்ப்பூச்சம்பா, பொம்மி, சன்னம் பிசினி, பால்குடவாழை, சின்னப்பொன்னி, கருங்குறுவை, முருகன்கார், ராஜமன்னார், சேலம்சன்னா ஆகும்.

தங்கச்சம்பா, பாசுமதி, சீரகச்சம்பா, காடைக்கழுத்தான், பயகுண்டா,  வெள்ளைமிளகுச்சம்பா, கிச்சிலிச்சம்பா, மடுமுழுங்கி, கொட்டாரச்சம்பா, சன்னச்சம்பா, இறவைப்பாண்டி, சம்பாமோசனம், செங்கார், நீலச்சம்பா, பூவன்சம்பா, ஆத்தூர்கிச்சிலி, கைவரச்சம்பா, காலாநமக், மாப்பிள்ளைச்சம்பா, கட்டைச்சம்பா, முதலிய நெல் வகைகளை  இயற்க்கை விவசாயம் செய்து உயிர்களின் பசிப்பிணியை தீர்த்து இன்பமான இல்லற வாழ்க்கை வாழ வழி செய்தனர் நம்முடைய  விவசாயிகள்.

பழம்பெருமை வாய்ந்த நெல் இனங்கள் பருவக்காற்றினால் பெய்யும் மழையை  ஈர்த்து  தக்கவைத்து  கொண்டு நன்கு செழித்து வளரவும். நீரின் தன்மை குறையும் போது தளர்ந்து போகாமல் வறட்சியைத் தாங்கும் உறுதியும் இதற்கு உண்டு. இயற்கை விவசாயத்தை சார்ந்திருக்கும் இவ்வகையான நெல் புறச்சூழல்களைத் தாங்கி வளரும் தன்மைகொண்டது. நெல்லை கைக்குத்தல் முறையில் அரிசியை எடுப்பதால், புரதம்இரும்புகால்சியம்நார்ச்சத்து, முழுமையான மாவுச்சத்து மற்றும் தாதுச் சத்துகள் இருப்பதால் நோயின்றி உயிர் வாழ ஏற்றதாய் அமைகிறது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழம்பெருமை வாய்ந்த தஞ்சையை நம் முன்னோர்கள் மாடு கட்டி போரடித்தால் மாளாது  என்று யானை கட்டிப் போரடித்த தாய்நாடு நம் தமிழ்நாடு.

மருத்துவக் குணங்கள் மிகுதியாக உள்ள பழம்பெருமை வாய்ந்த சில நெல்மணி இனத்தின் பெயர்கள்:

அறுபதாம் குறுவை:
  • உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான எலும்பு, மூட்டு, பற்கள் வலுப் பெறவும்,நரம்பு, தசை தொடர்பான பிரச்னைகள் நீங்க உதவுகின்றது.

இலுப்பைப்பூ சம்பா:
  • கை, கால்களை அசைவற்றதாகச் செய்யும் நோய் (பக்கவாதம்),  சர்க்கரை நோய் (நீரிழிவு), மூட்டுவலியை குறைக்கவும், குழந்தைகளின் எலும்புகளை வலுப்பெறவும் உதவுகிறது.

கருங்குறுவை:
  • பல நோய்களை தடுக்கும் மருத்துவக்குணங்கள் மிகுந்த "வயாகரா அரிசி" என்று இதனை கூறுவார்கள்.

கருடன் சம்பா:
  • சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் சுத்திகரிக்கவும்   உட லை உறுதியாக்கவும் பயன்படுகிறது.

கறுப்புக் கவுனி:
  • இரத்தக்குழாய்களை விரிவடைய செய்வதுடன், இருதயத்தை பாதுகாத்து. ஆண்மை குறைபாடுயில்லாமலும். புற்றுநோய் பரவாமலிருக்கவும் , நீரிழிவுநோயை கட்டுப்பாடுடன் வைத்திருக்க சிறந்தது.

காட்டு யானம்:
  • இரவில் மட்டும் காய்ச்சி நீராய்க் கரைந்த உணவை, மிதமான வெப்பத்தில் கறிவேப்பிலை சேர்த்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் கஞ்சியைச் பருகுவதால் சிறிது சிறிதாக நீரிழிவுநோயை குணப்படுத்தலாம் (உடல் இளைத்து) மரணம் நேரக் கூடிய நோய் (புற்றுநோய் ) தீவிரம் குறையும்.

காலான் நமக்கு:
  • மூளை நரம்பைச செயல்படுவதற்கும், இரத்தம் சம்மந்தமான நோய்களையும், சிறுநீரகப் பிரச்னைகளையும் குறைக்க உதவும். மேலும், கர்ப்பிணிகள் இந்த அரிசியை உண்ணுவதால் தாய்,சேய்க்கும் ஆரோக்கியத்தை தருகிறது.

கிச்சிலிச் சம்பா:
  • தாய்ப்பால்  நன்றாகப்  சுரக்க ஆற்றல்புரியும். இரும்பு, கால்சியம் முதலிய சத்துகள் மிகுதியாக இருப்பதுடன், உடல் வலிமைபெற ஏற்றதாக உள்ளது.

குடைவாழை:
  • இரைப்பையிலிருந்து வரும் உணவில் உள்ள சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்க்கும் குடலை சுத்தப்படுத்த உறுதுணையாக இருக்கிறது. செரிமானக் சீர்குலைவுகள் மற்றும் வயிற்றுப்புண்ணை எளிதில் குணமடையும் தன்மை வாய்ந்தது.

சீரகசம்பா:
  • பிணியால் வருந்துவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். உடல் அழகு பெற்று இளமை தோற்றமாக இருக்க இவ்வகையான அரிசி பயன்படுகிறது.

சேலம் சன்னா:
  • மண்பானையில் உணவை செய்து, பழஞ்சோறாக உண்டால் உடல், தசை, எலும்பு, நரம்புகள் உறுதியாகும்.

தங்கசம்பா:
  • உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று மீண்டும் இருதயத்திற்கே திரும்பும் தொடர்ச்சியான இரத்தச் சுழற்சியை சீராக்கி, இதயம் உறுதி பெற பயன்படுகிறது.

தூய மல்லி:
  • மனநலக் கோளாறுகள் நீங்க, உடல் உள்ளுறுப்புகள் மற்றும் இளமையான தோற்றத்தை நீடிக்கச் செய்ய உதவுகிறது.

மாப்பிள்ளைச் சம்பா:
  • அன்னம் வெந்த பிறகு வடித்து எடுத்த, கொழகொழப்புத் தன்மை உடைய நீரை குடித்தால் வாய்ப்புண்வயிற்றுப்புண் ஆறும்.

வாலான் அரிசி:

  • தண்ணீரில் ஊறவைத்த வாலான் அரிசியை தைமாதம் முதல்நாள் அன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் படைக்கும் திருவிழாகாலங்களில் எள், வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துப் வழிபடுவார்கள்.  

முடிவுரை: 

    மண் வளமும் இயற்கை நலமும் வாய்ந்த நெல்மணியின் சிறப்புக்களை உலகத்தில் நிலை நாட்ட, மறுபடியும் வயல் வெளி நம் தேசத்தின் வாழ்க்கை ஒளியாக உருவாக்க, உழவன் செய்யும் தொழிலை வளமாக்க, அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாய் உழைத்திடுவோம்.
    விவசாயத்தின் மீதுள்ள ஆர்வமும் தேசத்தின் மீதுள்ள பற்றும் “வயல்வெளி நம் தேசத்தின் வாழ்க்கை ஒளி” என்ற தலைப்பில் எனது முன்னோர்கள் அறிவுரை கேட்டு பல நூல்களைப் படித்து அதனுள் இருக்கும் ஆழ்ந்த கருத்துக்களை நான் இங்கு பதிவு செய்துள்ளேன்.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars